அமைச்சர் இல்ல சிறுமிகள் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தியிருந்தால் மர்மம் இருந்திருக்காது!

Date:

அமைச்சர் இல்லத்தில் தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் வெளிப்படுத்திய சிறுமியோ அல்லது பெண்ணோ, ஆரம்ப கட்டத்தில் தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தால் கிசாலினியின் மரணம் மர்மமானதாக இருந்திருக்க முடியாது என கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைச்சங்க இணைப்பாளர் வாசுகி வள்ளிபுரம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பெண்கள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைக்கு ஊடகங்களில் பார்க்கின்ற செய்திகளிலே 15 வயது சிறுமி கோழிக்கூட்டுக்குள் அடைத்து வைத்து தந்தையினால் கொடுமைப்படுத்தல், தந்தையினால் 14 மற்றும் 12 வயது சிறுமிகள் கர்ப்பம், தந்தையினால் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போன்ற செய்திகளை கடந்த சில நாட்களாக நாங்கள் பார்த்து வருகின்றோம்.

இந்த செய்திகளை கேட்கின்றபொழுது உண்மையாகவே மனம் வேதனைப்படுகின்றது. உருவத்திலே மனிதர்களாக இருக்கும் இவ்வாறானவர்கள் குணத்திலே மிருகங்களாக இருப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

உண்மையிலே, நகர் மற்றும் கிராமப்புறங்களில் சிறுமிகள் வன்புணர்வுக்குட்படுதல், துன்புறுத்தப்படல் உள்ளிட்ட விடயங்கள் கௌரவத்திற்காக வெளிக்கொண்டுவரப்படுவதில்லை. சில பெற்றோர் அதனால் கௌரவம் பாதிக்கும் என கருதுகின்றனர்.

வித்தியாவின் கொலைக்கு முன்னர் இடம்பெற்ற பல சம்பவங்களும், கிசாலினியின் கொலைக்கு முன்னர் இடம்பெற்ற பல சம்பவங்களும் வெளிக்கொணரப்பட்டிருந்தால் இன்று வித்தியாவின் கொலையாக இருக்கலாம் அல்லது கிசாலினியின் கொலையாக இருக்கலாம் அவை நிறுத்தப்பட்டிருக்கும்.

கொலைகளிற்கு முன்னரான பகுதிகள் வெளிக்கொண்டுவரப்படுவதில்லை. இவ்வாறான கொடுமைகள், பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றபொழுது முறையிடுங்கள், எங்களைப்போன்று பல மாவட்டங்களில் பெண்கள் அமைப்புக்கள், செயற்பாட்டு குழுக்கள் கிராமங்களிலும், மாவட்டங்களிலும் செயற்பட்டு வருகின்றது.

ஒருவர் தான் விரும்பாத ஒரு விடயம் இடம்பெறுகின்றது, அல்லது துன்புறுத்தல் இடம்பெறுகின்றது என உணர்ந்தால் அவ்வாறான பெண்கள் அமைப்புக்களிடம் அல்லது எங்களிடம் இரகசியமான முறையில் முறையிடுங்கள்.

அவ்வாறான முறைப்பாட்டின் ஊடாக இரகசியமான முறையில் குற்றவாளியை அடையாளம் கண்டு அவருக்கான தண்டனையை பெற்றுக்கொடுப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

சகல பெற்றோரும் உங்களது பிள்ளைகளில் எவ்வளவு கவனம் கொள்கின்றீர்களோ, அதேபோன்று இவ்வாறான குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டம். பிள்ளைகள் உறவினர்கள் ஊடாகவோ அல்லது தமக்கு அநீதி, அல்லது துஸ்பிரயோகங்கள் இழைக்கப்படுகின்றபோது என உணர்கின்ற பட்சத்தில் அவைகளை வெளிக்கொண்டுவருவதன் மூலம் கொடுமைகள், கொலைகள் நடைபெறுவதை தடுக்க முடியும்.

இன்று முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் வீட்டிலே ஆரம்ப காலத்தில் வேலை செய்த பெண்கள் சிறுவர்களிடத்திலே விசாரணைகள் நடத்தப்படுகின்றபொழுது, நானும் அதில் துன்புறுத்தப்பட்டேன் என்ற விடயம் கிசாலினியின் மரணத்திற்கு பின்னர் தெரிய வருகின்றது.

தற்பொழுது தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் வெளிப்படுத்திய சிறுமியோ அல்லது பெண்ணோ, ஆரம்ப கட்டத்தில் தான் பாதிக்கப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தால் கிசாலினியின் மரணம் மர்மமானதாக இருந்திருக்க முடியாது.

துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுகின்றதாக இருந்தாலும், தனது உரிமைக்கு மாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக இருந்தாலும் இலங்கையில் பெண்கள் சிறுவர் பாதுகாப்பு சட்டங்கள் எழுத்துருவில் இருக்கின்றன. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

சிறுவர்களாக இருந்தாலும், பெற்றோர்களாக இருந்தாலும் குற்றவாளியை மூடிமறைக்காதும், கௌரவத்தை பாராதும் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதன் ஊடாகவே வித்தியா, கிசாலினி போன்றவர்களின் மரணம் இடம்பெறாது தடுக்கவும், சிறுவர்களிற்கான ஒளிமயமான எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கவும் முடியும்.

ஒரு மரணம் சம்பவிக்கும்வரை காத்திருக்காமல், அதற்கு முன்னராக துஸ்பிரயோகங்கள் இடம்பெறுமிடத்தில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் உடனடியாக கொண்டு வருவதற்கு சகல மக்களும் விழிப்புணர்வுடன் சட்டத்தை அணுகி நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என வேண்டுகின்றேன் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்