இலங்கை கிரிக்கெட் வீரர் சந்துன் வீரக்கொடி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வரவிருக்கும் இந்தியா தொடருக்காக தனித்தனியாக பயிற்சி பெற்ற குழாமொன்றில் அவர் அங்கம் வகித்திருந்தார்.
கொழும்பு சினமன் கார்டன் கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற 15 மூத்த கிரிக்கெட் வீரர்களுள் சந்துன் வீரக்கொடியும் ஒருவர்.
இந்தியா தொடருக்கு முன்னதாக பயிற்சி போட்டிகளில் விளையாடுவதற்காக சந்துன் வீரக்கொடி மற்றும் பானுக ராஜபக்ஷ, அஞ்சலோ பெரேரா, அசேல குணரத்த உள்ளிட்ட குழாம் நேற்று இரவு தம்புள்ளவிற்கு அனுப்பப்பட்டது.
சினமன் கார்டன் கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற 15 வீரர்களும் இப்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தம்புள்ளவில் தனி உயிர்ப்பாதுகாப்பு குமிழ் திட்டத்தில் இன்னொரு குழாம் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் யாரும் தொற்றிற்குள்ளாகவில்லை.
அண்மையில் இங்கிலாந்து சென்ற இலங்கை தேசிய அணியில் அங்கம் வகித்த இரண்டு பயிற்சி ஊழியர்கள் தொற்றிற்குள்ளானதையடுத்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, இந்திய தொடரில் ஆடுவதற்காக புதிய அணியொன்றை இலங்கை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.