காஷ்மீரில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் குடும்பத்துக்கு ஆந்திர அரசு ரூ.50 லட்சம் நிதி அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் ரஜவுரி மாவட்டம் சுந்தர்பானி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப் பட்டனர். தீவிரவாதிகள் தாக்கியதில் இந்திய இராணுவ வீரர்கள் ஸ்ரீஜித் மற்றும் குண்டூரை சேர்ந்த ஜஷ்வந்த் ரெட்டி ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கொத்தபாளையத்தை சேர்ந்த ஜஷ்வந்த் ரெட்டி, கடந்த 2016ம் ஆண்டில் மதராஸ் ரெஜிமென்டில் இராணுவத்தில் சேர்ந்தார். முதலில் நீலகிரியிலும், பின்னர், காஷ்மீரிலும் பணியில் அமர்த்தப்பட்டார். அடுத்த மாதம் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் வீரமரணம் அடைந்துள்ளார் ஜஷ்வந்த். இந்நிலையில், கடப்பாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, வீரமரணம் அடைந்த ஜஷ்வந்தின் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.
ஜஷ்வந்த் இளம் வயதில் நாட்டுக்காக உயிர் துறந்துள்ளார். இவரது தியாகம் வாழ்நாளில் மறக்க இயலாது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.