சேர் பெயில். மஹிந்த ராஜபக்சவும் பெயில். ராஜபக்சக்களும் பெயில். கேட்டாவும், மஹிந்தவுமே தீர்வு என பின்னால் ஓடிப் போனவர்கள் இன்று பசில் ராஜபக்ச வரட்டும் என காத்திருக்கிறார்கள். பசில் 10 சதவீதம் தரகுப்பணம் வாங்குபவர் என சொல்வார்கள். இனி என்ன நடக்கிறதென பார்ப்போம் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
சிரச ஊடகத்தின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்ய அரசு முயற்சிக்கிறது. தமக்கு எதிரான குரல்வளையை தடுப்பதற்காக இதனை செய்கிறார்கள். ஊடகங்களின் குரல்வளையை அடக்கி, உங்கள் மீதான விமர்சனத்தை இல்லாமலாக்க முடியாதென்பதை அரசுக்கு தெரிவிக்கிறோம்.
நாட்டை விற்பதை, மோசடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்துவது தவறா?
அரசாங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் பல வலைத்தளங்களை வாங்கினார். இன்று என்ன நடக்கிறது. சமூக ஊடகங்களில் 70 வீதத்திற்கும் அதிகமாக அரசாங்கத்திற்கு எதிராகவே கருத்து தெரிவிக்கப்படுகிறது.
அனைத்தும் இன்று ராஜபக்சக்கள்தான். உலகில் எங்கும் குடும்ப ஆட்சியை மேற்கொண்டவர்களின் ஆட்சி நிலைத்ததில்லை.
பசில் நாளை வரப்போகிறாராம். வெடிகொளுத்தி பால்சோறு தயாரிக்க தயாராகிறார்கள். ஆனால் மக்களால் முடியுமா? அரிசியின் விலை என்ன? அரிசி மாபியாவை அடக்க போவதாக கூறி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று என்ன நடக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை.
இலங்கையில் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திலேயே மக்களின் ஆதரவை இழந்த ஒரே அரசு இதுதான் என்றார்.