பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் சனிக்கிழமை (10) மு.ப. 9.30 மணியளவில் யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரித்து உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்காதே, கட்டுப்பாடின்றி அதிகரித்துச் செல்லும் அத்தியவசிய பாவனைப் பொருட்களின் விலைகளைக் குறை, எரிபொருட்களின் விலையேற்றத்தால் அவதியுறும் மக்களைப் பாதுகாக்க, அவற்றின் விலைகளை உடனடியாகக் குறை, விவசாயிகளின் உரத் தடை நெருக்கடிக்கு விரைவாகத் தீர்வை வழங்கு, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை விஞ்ஞான பூர்வமாக முன்னெடு, கொரோனாவின் திரை மறைவில் மக்களை வதைக்காதே, சமுத்திர சூழல் மாசுபடுத்தப்பட்டுக் கடல் வளம் நாசமாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்து, பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு போதிய நஸ்டஈடு வழங்கு, இந்திய இழுவைமடி ரோலர் படகுகளின் சட்டவிரோத மீன்பிடி அத்துமீறலைத் தடுத்து நிறுத்து, கொரோனாத் தடுப்பு மருந்து பாரபட்சமின்றி அனைவருக்கும் கிடைக்க வழி ஏற்படுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு பாடசாலைகளை மீள ஆரம்பிக்க ஆவன செய், உயர் கல்வியைத் தனியார் மயப்படுத்தி, ஏழைகளின் கல்வி உரிமையை மறுக்காதே, அரசியல் கைதிகள் அனைவரையும் அரசியல் தீர்மானத்தின் மூலம் உடனடியாக விடுதலை செய், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், நில, நீர் ஆக்கிரமிப்புகளை நிறுத்து, மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறிக்காதே, அதிகாரப் பகிர்வை மேற்கொள், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண், எமது நாட்டின் வளங்களை விலைகூறி விற்காதே, அந்நிய வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டிக்கு இடமளிக்காதே ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் இடம்பெறவுள்ளது.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெறவுள்ள இப் போராட்டத்தில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அழைப்புவிடுத்துள்ளது.
பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களிற்கு அனுமதியில்லையென இன்று அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த அதிரடி அறிவிப்பை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.