பருத்தித்துறையில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மரணவீட்டிற்கு சென்ற பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜே-404 கிராம சேவகர் பிரிவில் (கலப்பனாவத்தை) இந்த சம்பவம் நடந்தது.
கடந்த வாரம் அந்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார். கடற்றொழிலாளியான அவருக்கு அறிகுறிகள் தென்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதையடுத்து அவரது தொடர்பிலிருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் மேலும் 16 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிற்கு அருகிலுள்ள வீடொன்றில், படுக்கையிலுள்ள நோயாளியொருவர் திடீரென உயிரிழந்திருந்தார். இதையடுத்து, அவரது சடலத்தை பிசிஆர் சோதனைக்கு அனுப்பியதுடன், வீட்டிலிருந்த 4 பேருக்கும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 பேருக்கு தொற்று உறுதியானது.
உயிரிழந்த முதியவருக்கும் தொற்று உறுதியானது.
இதையடுத்து, மரண வீட்டிற்கு சென்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.