கிளிநொச்சி மாவட்டத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த சிலருக்கு மாவட்ட மட்ட சுகாதார உயர் அதிகாரிகளின் செல்வாக்கின் அடிப்படையில் கொவிஷீல்ட் (அஸ்ராசெனிக்கா) இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டமை தொடர்பில் தகவல்கள்
வெளிவந்துள்ளன.
அண்மையில் கிளிநொச்சியில் கொவிஷீல்ட் தடுப்பூசி தென்னிலங்கையைச் சேர்ந்த சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத சிலர் அவர்கள் இங்கு பணியாற்றுகின்ற
அதிகாரிகளின் உறவினர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தங்களின் செல்வாக்கினை பயன்படுத்தி மாவட்ட சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவரது நேரடித் தலையீட்டினால் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுள்ளனர் எனவும்
கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப்பணியாளர்களுக்கான கொவிஷீல்ட் இரண்டாவது தடுப்பூசிக்காக வழங்கப்பட்ட ஒதுக்கீட்டில் இருந்த பிற மாகாணத்தவர்களுக்குத் தடுப்பூசிகள் கிளிநொச்சியில் வைத்து வழங்கப்பட்டுள்ளன எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் மேல்மாகாணத்தில் கொவிஷீல்ட் முதலாவது தடுப்பூசியினைப் பெற்ற பலருக்கு இரண்டாவது தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்னமும் வழங்கப்படவில்லை. அவர்களே தற்போது பிற இடங்களில் சென்று செல்வாக்கின் ஊடாக அவற்றினைப் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதேவேளை கடந்த 7ஆம் திகதி காலி பிரதேசத்திலும் இவ்வாறாக மாவட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கான கொவிஷீல்ட் இரண்டாவது தடுப்பூசியினை அதிகாரிகளின் செல்வாக்கினை பயன்படுத்தி கொழும்பிலிருந்து சென்ற சிலர் பெற்றுக் கொண்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு காலி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் தொற்றுநோயியல் பிராந்திய அதிகாரி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நேற்று கோவிட் செயலணியை சந்தித்த போது, தடுப்பூசி வழங்கலில் வினைத்திறனுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயற்பட அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



