அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸின் இந்திய (டெல்டா) மாறுபாட்டுடன் கண்டுபிடிக்கப்பட்ட நபர் இலங்கைக்குள் நுழையவில்லை என்று வைத்தியர் சந்திம ஜீவந்தர இன்று தெரிவித்தார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரியல் பிரிவின் இயக்குநர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இன்று மாலை ஊடகங்களிடம் இதனை தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு செல்லும் வழியில் குறிப்பிட்ட பயணி, இலங்கையில் இடைமாறி பயணித்ததாக தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அந்த நபர் வேறு நாட்டிலிருந்து வந்து இலங்கையில் இடைமாறி, அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார் என்பது தெரியவந்துள்ளது என கூறினார்.
முன்னதாக, அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் அண்மையில் ஏற்பட்ட COVID-19 கொத்தணிக்கு, மே 08 ஆம் திகதி இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நபர் காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஹொட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அந்த நபர் விடுவிக்கப்பட்டதாகவும், அவர் மூலமே தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அவுஸ்திரேலியா தரப்பில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.