புங்குடுதீவு பதினொராம் வட்டாரத்தில் வாழ்ந்து வருகின்ற சண்முகம் என்பவருக்கு சொந்தமான சினைப்பசுவொன்று இறைச்சிக்காக கடத்தப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக நேற்று காலையில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களிடம் தகவல் வழங்கப்பட்டிருந்தது.
விரைந்து செயற்பட பிரதேச சபை உறுப்பினர் நாவலன் குறிகாட்டுவான் பொலிஸ் நிலையத்தினரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுக்க ஒத்துழைப்பு நல்கியிருந்தார். அத்தோடு பாதிக்கப்பட்டவரின் சகோதரரான நாகராசாவுக்கு சொந்தமான பசுவொன்றும் சம்பவ இடத்திலிருந்து உயிரோடு மீட்கப்பட்டது.
தீவிர விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை அப்பகுதியில் வாழ்கின்ற கிருபா என்கிற நபர் ஊர்காவற்துறை பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டார்.
இந்நபர் நீண்டகாலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிசார் கூறுகின்றனர். அத்தோடு மேற்படி சினைப் பசுவின் இறைச்சியை விற்பனை செய்வதற்கு உதவியிருந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.




