வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக் குளக்கட்டு வீதி வழியாக நகருக்கு பொதுமக்கள் வருகின்றனர்.
வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதி செப்பனிடப்பட்டு வருவதால் குறித்த வீதியுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பூந்தோட்டம், மகாறம்பைக்குளம், காத்தார் சின்னக்குளம், பெரியார்குளம் போன்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வவுனியா குளக்கட்டு வழியாக நகரை நோக்கி வருகின்றனர்.
நகரில் வியாபார நிலையங்கள் உட்பட பல்வேறு திணைக்களங்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தேவையற்ற வகையில் அநாவசியமாக பொதுமக்கள் வருகை தருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றது.
நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியில் பொலிஸ் சோதனைச்சாவடி ஒன்று செயற்பட்டு வருவருவது போல குளக்கட்டுப் பகுதியிலும் பொலிசாரை கடமையில் ஈடுபடுத்தி அநாவசியமாக பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.