எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்திற்குள்ளானதால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை தொடர்ந்து, இலங்கையர்கள் அமில மழையை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், சுவாச பாதிப்புள்ளவர்களிற்கும் அபாயமான நிலைமை ஏற்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
நைட்ரிக் அமிலம் மற்றும் ஒப்பனை இரசாயனங்கள் அடங்கிய கப்பல் கடந்த 20ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே தீப்பற்றியது. கப்பலின் இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்கள் கடலில் விழுந்து பல ஆபத்தான பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, எரியும் கப்பலில் இருந்து கடலில் விழுந்த நச்சுப் பொருட்களால் கடல்வாழ் உயிரினங்களுக்கும், பவளப்பாறைகள் மற்றும் கடற்பரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என தெரிவித்தது.
“இறந்த கடல் ஆமைகள், பறவைகள் மற்றும் சிறிய மீன்களின் உடல்கள் கரையொதுங்கியுள்ளதை தற்போது காணலாம்” என அதன் பொது மேலாளர் பிரதீப் குமார கூறினார்.
“இந்த நிலைமையை களுத்துறை, கொழும்பு மற்றும் நீர்கொழும்பிலிருந்து கல்பிட்டி வரையிலான கரையோரங்களில் காணலாம். இறந்து கரையொதுங்கும் உயிரினங்களின் உடலில் தீக்காயங்கள் இருப்பதை நாம் காணலாம், அதாவது நீரின் வெப்பநிலை மிக அதிகமாக இருந்திருக்கும் ” என்று அவர் மேலும் கூறினார்.
“எரியும் கப்பலில் இருந்து வெளியேறும் நச்சு புகை காரணமாக கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது என்பதையும் நாங்கள் முடிவு செய்யலாம். குருநாகல் போன்ற பகுதிகளுக்கு அருகே காற்று சுழற்சி பூமிக்கு மிக அருகில் இருப்பதால், சிறிய அமில மழை பெய்யக்கூடும் என்று நாம் கணிக்க முடியும். நச்சு காற்றை சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம்.” என்றார்.்