கடந்த சில தினங்களாக நோபல் பரிசு வென்ற பிரெஞ்சு அறிவியல் ஆராய்ச்சியாளர் லூக் என்பவர் கூறியதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதில், கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் 2 ஆண்டுகளில் இறந்து விடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது முற்றிலும் போலியான தகவல் என கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஓரிரு மாதங்களாக இதன் தாக்கம் ருத்ரதாண்டவம் ஆடியது என்பது மிகையாகாது. இலட்சக்கணக்கான புதிய கொரோனா நோயாளிகள் தினம், தினம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.
இந்த பெருந்தொற்றின் அவலநிலையில், சிலரது அலட்சியத்தால் போலியான செய்திகள் அனுதினமும் வாட்சப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக தளங்களால் இரண்டாம் அலையை காட்டிலும் தீவிரமாக பரவி வருகிறது.
அவற்றுள் மிக கொடுமையான போலி தகவல் தான், Luc Montagnier எனும் நோபல் பரிசு வென்ற பிரெஞ்சு அறிவியல் ஆராய்ச்சியாளர், கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் அனைவரும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மரணித்து விடுவார்கள் என்ற இந்த மரணத்தை தவிர்க்கவே முடியாது, இதை மனித இனம் கடந்து வர தான் வேண்டும். இது வரலாற்று பக்கங்களில் இடம்பெறும். இந்த தடுப்பூசியானது அறிவியலில் நடந்த மிகப்பெரிய தவறு என லூக் கூறியதாக அந்த போலி தகவல் காட்டுத்தீ போல கடந்த சில தினங்களாக பரவி வருகிறது.
படித்தவர்கள், கொரோனா பற்றி அறிந்தவர்கள் கூட இப்படியான தகவல்களின் உண்மை தன்மை என்ன என்பது குறித்து ஒரு நொடி கூட யோசிக்காமல் ஷேர் செய்து வருவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
உண்மையில் லூக் கூறியது என்பது, பெருமளவு கொரோனா தொற்று பரவி வரும் சூழலில், ஒரே நேரத்தில் பெரும் எண்ணிக்கையிலான நபர்களுக்கு ஒரே இடத்தில் தடுப்பூசி போடுதல் என்பது, புதிய மாறுபட்ட கொரோனா வைரஸ் உருவாக காரணியாக அமையலாம். இதனால், கொரோன பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. இதுவொரு வரலாற்று பிழை என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இதை தவறாக திருத்தி லூக், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அனைவரும் 2 ஆண்டுகளில் மரணித்துவிடுவார்கள். இதை தடுக்கவே முடியாது. இது ஒரு பெரும் வரலாற்றுப் பிழை என பரப்பி வருகிறது ஒரு பெரும் கூட்டம். இது கொரோனா இரண்டாம் பரவலை காட்டிலும் மிக கொடியது ஆகும்.
இந்த தகவல் போலியானது என, இந்திய அரசின் செய்தி நிறுவனமான PIB நேற்று (25-05-2021) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. ஆனால், இந்த உண்மையை பரப்புவோர், பகிர்வோர் மிக குறுகிய எண்ணிக்கையில் தான் இருக்கின்றனர். ஆனால், போலி செய்தியை இலட்சக்கணக்கானோர் பரப்பி வருகின்றனர்.
இந்திய செய்தி நிறுவனம் செய்திருந்த ட்வீட்:
இப்படியான போலி செய்திகள் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் அச்சத்தை பலமடங்கு அதிகரிக்க செய்கிறது. ஏற்கனவே, தடுப்பூசி சார்ந்து இந்திய மக்கள் மத்தியில் பல குழப்பங்களும், தயக்கங்களும் நிலவு வருகின்றன.
இதை போக்கி அவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள செய்ய மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நேரத்தில், இப்படியான தற்குறித்தனமான போலி செய்திகள் அரசின் முயற்சிகளுக்கு பெரும் தடையாக அமைகிறது.