மன்னாரில் உள்ள கொரோனா ஆரம்ப சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் தொற்றாளர்களுக்கு தேவையான ஒரு தொகுதி போத்தலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் நேற்று செவ்வாய்க்கிழமை (25) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெலிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை போத்தலில் அடைக்கப்பட்ட ஒரு தொகுதி தூய குடிநீர் போத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் தாரபுரம் துருக்கி சிட்டி பகுதியில் உள்ள பெண்களுக்கான கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் தொற்றாளர்களுக்கு போத்தலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடி நீருக்கான தேவை ஏற்பட்டது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்திடம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்குச் சென்று அரசாங்க அதிபரிடம் ஒரு தொகுதி தொகுதி போத்தலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை கையளித்தனர்.
இதன் போது மன்னார் உதவி மாவட்ட செயலாளர் எஸ். குணபாலன் , மன்னார் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி கே.திலீபன் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக ஒரு தொகுதி போத்தலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் கொரோனா தொற்றில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்மையும் குறிப்பிடத்தக்கது.




