சீனாவின் யுனான் மாகாணத்தில் யாங்பி யி தன்னாட்சி கவுண்டியை தாக்கிய தொடர் பூகம்பங்களால் 3 பேர் பலியாகினர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாலி பாய் தன்னாட்சி மாகாணத்தின் அனைத்து 12 மாவட்டங்களிலும், நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. யாங்பி மிக மோசமான பாதிப்புக்குள்ளானது என்று சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிசி) தலைவரான யாங் குசோங் கூறினார்.
யாங்பி கவுண்டியில் இரண்டு மரணங்களும், யோங்பிங் கவுண்டியில் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளன. மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் 24 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக சீன அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 20,192 வீடுகளில் சுமார் 72,317 குடியிருப்பாளர்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5.0 ரிக்டர் அளவுக்கு அதிகமான நான்கு பூகம்பங்கள் யாங்பியை இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை (பெய்ஜிங் நேரம்) தாக்கியதாக சீனா பூகம்ப நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.இப்பகுதியில் அதிகாலை 2 மணி நிலவரப்படி 166 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
நிலநடுக்க மண்டலத்திற்கு மீட்புப் படைகள் அனுப்பப்பட்டு, மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இருப்பினும், இன்று வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி சின்ஹுவா தெரிவித்துள்ளது.