இலங்கையில் பொது பல சேனா, சிங்கள-பெளத்த மேலாதிக்கத்தை வலியுறுத்தும் ஒரு அமைப்பு என 2020 ஆம் ஆண்டுக்கான ‘சர்வதேச மத சுதந்திரத்தின்’ மீதான அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் இயங்கிவரும் குடிமைச் சமூகங்களின் தகவல்களின்படி, சமூக வலைத்தளங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபான்மை இனங்கள் மீதான காழ்ப்புணர்வுப் பரப்புரை இனங்களுக்கிடையேயான பகைமையைத் தூண்டுகின்றன என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பொது பல சேனா போன்ற சிங்கள – பெளத்த தேசிய அமைப்புகள் மத, இன சிறுபான்மை மக்களைக் குறிவைத்து சமூக வலைத்தளங்களினூடு தமது மேலாதிக்க சிந்தனையைப் பரப்பி வருகின்றன. குறிப்பாக முஸ்லிம், தமிழ் மக்களுக்கு எதிரான இனத்துவேசப் பரப்புரைகளை இவ்வமைப்புகள் மேற்கொள்ளும்போது அரசாங்கம் அதைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறது என்கிறது இவ்வறிக்கை.
2020 மார்ச் முதல் ஜூன் வரையிலான காலப் பகுதியில் சமூக வலைத் தளங்களில், மும் மொழிகளிலும் அவதானிக்கப்பட்ட துவேசமான பேச்சுக்கள், கருத்துக்களில், 58 வீதம், முஸ்லிம்களையோ அல்லது இஸ்லாம் மதத்தையோ தாக்கியவையாகவும், வீதம் கிறிஸ்தவர்களைத் தாக்கியவையாகவும், 5 வீதத்துக்குக் குறைவானவை தமிழ் அல்லது இந்துமதத்தைத் தாக்கியவையாகவும் இருந்தன. தனியே சிங்கள மொழியிலான வலைத்தளக் கருத்துக்களில் 79 வீதம் முஸ்லிம்களையோ அல்லது இஸ்லாமையோ தாக்கியவையாக இருந்தன. தமிழ் மொழியிலான வலைத்தளக் கருத்துக்களில் 46 வீதம் தமிழ்க் கிறிஸ்தவர்களைத் தாக்கியவையாகவும், 35 வீதம் முஸ்லிம்களையோ அல்லது இஸ்லாமையோ தாக்கியவையாகவும் இருந்தன என ஒரு தொண்டரமைப்பின் ஆய்வு தெரிவிப்பதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 2020 இல் நடைபெற்ற விசாரணயொன்றின்போது, முஸ்லிம் மருத்துவர் சியாப்டீன் ஷாஃபியிந் பல வருட சேவைக்காலத்தின்போது அவர் சிங்களப் பெண்களில் கட்டாய கருவழிப்புச் செய்திருந்தார் என 76 மருத்துவப் பணியாளர்கள் சாட்சியமளித்திருந்தனர். 2019 இல் இச்சாட்சியங்களைப் பரிசீலனை செய்யவென ஒரு மருத்துவ நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டது. அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் முன்னரே சாஃபி அதீத சொத்துச் சேர்ப்பில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் 2019 இல் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் சமூக வலைத் தளங்களில் கட்டாய கருவழிப்பு பற்றிய அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன. பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க நீதிவான் ஒருவர் அவரது வழக்கை மார்ச் 2021 வரை நீடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் மட்டுமல்ல, ஒலி, ஒளி பரப்பு மற்றும் பத்திரிகை ஊடகங்களில் முஸ்லிம்களைக் கோவிட் தொற்றுடன் தொடர்பு படுத்தி வெறுப்புணர்வைப் பரப்பும் கருத்துக்கள் பரப்பப்பட்டன என முஸ்லிம் குடிமைச் சமூக அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல்-மே, 2020 காலப்பகுதியில், முஸ்லிம்கள் கோவிட் தொற்றைப் பரப்பி வருவதாகவும் அவர்களது வியாபார நிலையங்களைப் பகிஷ்கரிக்கும்படியும் கோரி சமூக வலைத் தளங்களில் வேண்டுமென்றே செய்திகள் பரப்பபட்டன. ஆனால் அச்செய்திகள் பொய்யானவை என அதிகாரிகள் மறுத்தறிவிக்கவில்லை.
நவம்பர் 10, 2020 இல், கோவிட் தொற்றினால் மரணமடைந்த முஸ்லிம்களின் உடல்களைப் புதைக்கும் விவகாரத்தில் பொது பல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் ‘வஹாபி குழுக்கள் சமூகத்தில் ஊடுருவுகிறார்கள்’ என ஒரு அரசியல் விவாத நிகழ்வில் தெரிவித்திருந்தார்.
கிறிஸ்தவ பாதிரிமாருக்கும் அவர்களது வழிபாட்டுக்காரர்களுக்கும் எதிரான வன்முறைத் தாக்குதல்கள் என 2019 இல், 94 சம்பவங்களும், 2020 இல் 50 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. கோவிட் முடக்கம் காரணமாக அது குறைந்துள்ளது என செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வீடுகளில் வைத்து பிராத்தனைகளைச் செய்யும் மரபு வளர்ந்துகொண்டு வருவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




