கேகாலையை சேர்ந்த தம்மிக்க பண்டார தயாரித்த ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவ பாணி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்தாது என்பது உறுதியாகியுள்ளது.
இந்த பாணியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சுகாதார அமைச்சின் விசேட குழு சமர்ப்பித்த அறிக்கையிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாணியை கொரோனா தொற்றாளர்களிற்கு வழங்கிய பின்னர் எந்தவொரு நேர்மறையான முடிவையும் கண்டறிய முடியவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாணி மூலம் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியாது என்பதை நிபுணர்குழு தெளிவாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸின் முதல் அலையின் போது, தம்மிகா பண்டார காளியம்மனின் அருளினால் ஆயுர்வேத பாணியை தயாரித்துள்ளதாக அறிவித்திருந்தார்.
பாணியை வாங்க அவரது வீட்டின் முன்பாக பெருமளவு மக்கள் குவிந்தனர். இதனால் தனிமைப்படுத்தல் விதிகள் கூட காற்றில் பறந்தது.
அவரது பாணியை பருகிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உட்பட பல அமைச்சர்கள் பின்னர் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருந்தனர்.
தொற்றை குணப்படுத்த முடியும் என கூறி, பாணி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இணையத்தளம் ஊடாக விற்பனைக்கும் விளம்பரம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து பாணியை ஆய்வு செய்ய ஒரு சிறப்பு குழுவை சுகாதார அமைச்சு நியமித்தது. அந்த குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை பாணி விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.
குழுவின் அறிக்கையில், பாணியால் பலனில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.