தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதிப்பது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் பரபரப்பான விவாதம் நிகழ்ந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் இன்று சபாநாயகரிடம் கோரினார்.
பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, தடுத்து வைக்கப்பட்டுள்ள பதியுதீனை நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், விசாரணைகள் முடியும் வரை பாராளுமன்றத்தில் கலந்து கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீனை அனுமதிக்கக் கூடாது என்றார்.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். சரத் பொன்சேகாவிற்கும், வீரசேகரவிற்குமிடையில் சூடான வார்த்தை மோதல் வெடித்தது.
கடந்த திங்கட்கிழமை ரிஷாத்திற்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதும், இதுவரை முடிவு வழங்கப்படாமை ஏன் என கேள்வியெழுப்பினார்.
எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய போது, வீரசேகரவின் கோரிக்கை போன்ற ஒரு கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முதன்முறையாக கேட்பதாக சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற உறுப்பினரின் உரிமையை பறிக்க முடியாதென சுட்டிக்காட்டியதுடன், தமக்கு பிடிக்காத எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்து, 3 மாதங்கள் தடுத்து வைத்து அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிக்கும் அபாயமுள்ளதை சுட்டிக்காட்டினார்.




