புதுடெல்லி: சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை உத்தரவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச பயணியர் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் அந்த தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், வந்தே பாரத் திட்டத்தின்படி பிரான்ஸ், கென்யா, பூடான் உட்பட 27 நாடுகளுக்கு மட்டும் சில ஒப்பந்தங்களின் அடிப்படையில் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் இணை இயக்குனர் சுனில் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வர்த்தக ரீதியாக, இந்தியாவில் இயக்கப்பட்டு வரும் சர்வதேச பயணியர் விமானங்கள் தொடர்பான தடை உத்தரவு குறித்து, ஏற்கனவே முறையான வழிகாட்டுதல்கள் வெளியாகி அவை அமலில் இருந்து வருகின்றன.
தற்போதைய சூழலை கருத்தில் வைத்து அவை மேலும் நீட்டிக்கப்படுகின்றன. அதன்படி, வரும் 31ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரையில் சர்வதேச பயணியர் விமான போக்குவரத்துக்கான தடை நீடிக்கும். இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கோ, பிற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கோ திட்டமிட்ட கால அட்டவணையுடன் கூடிய பயணியர் விமானங்கள் இயக்கப்பட மாட்டாது. ஆனால், அனுமதி பெற்ற சர்வதேச சரக்கு போக்குவரத்து விமானங்கள் வழக்கம் போல் இயங்கும்.
அவசர தேவை மற்றும் முக்கிய அலுவல்களின் அடிப்படையில் சில முக்கிய வழித்தடங்களில் மட்டும் உரிய அனுமதியுடன் இயங்கும் விமானங்களுக்கு தடை ஏதும் இல்லை என அதில் கூறப்பட்டுள்ளது.