நாட்டில் மோசமான கொரோனா நிலைமைக்கு மத்தியில் விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு தனது குடிமக்களிடம் கூறியுள்ளது.
அமெரிக்க அரசின் தூதரக விவகாரங்கள் துறை 4 ஆம் நிலை பயண ஆலோசனையை இந்தியாவில் உள்ள தனது குடிமக்களுக்கு வெளியிட்டுள்ளது. இது அமெரிக்காவின் மிக உயர்ந்த பயண ஆலோசனையாகும்.
“கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் மருத்துவ பராமரிப்புக்கான அணுகல் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளியேற விரும்பும் அமெரிக்க குடிமக்கள் இப்போது கிடைக்கக்கூடிய வணிக சேவைகளைப் பயன்படுத்த வேண்டும்” என்று அமெரிக்க அரசின் தூதரக விவகாரங்கள் துறை ட்வீட் செய்துள்ளது. “அமெரிக்காவிற்கு தினசரி நேரடி விமானங்களும் பாரிஸ் மற்றும் பிராங்பேர்ட் வழியாக விமானங்களும் கிடைக்கின்றன” என்று அது மேலும் கூறியுள்ளது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே 14 நேரடி தினசரி விமானங்களும் ஐரோப்பா வழியாக இணைக்கும் பிற சேவைகளும் உள்ளன.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்கா இந்தியாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியது. “இந்தியாவில் தற்போதைய நிலைமை காரணமாக, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் கூட கொரோனா பாதிப்புகளை பெறுவதற்கும் பரப்புவதற்கும் ஆபத்து ஏற்படக்கூடும். மேலும் இந்தியாவுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்றால், பயணத்திற்கு முன் முழுமையாக தடுப்பூசி போடுங்கள். அனைத்து பயணிகளும் நிச்சசயம் முகக்கவசம் அணிய வேண்டும். மற்றவர்களிடமிருந்து 6 அடி விலகியிருங்கள், கூட்டத்தைத் தவிர்க்கவும், கைகளைக் கழுவவும் “என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) கூறியிருந்தது.
பிரிட்டன் ஏற்கனவே முன்னெச்சரிக்கை அடிப்படையில் இந்தியாவை தனது பயண சிவப்பு பட்டியலில் சேர்த்தது. ஆஸ்திரேலியாவும் இந்தியாவில் இருந்து அனைத்து விமானங்களுக்கும் தொற்றுநோய் காரணமாக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




