கொரோனா இரண்டாவது அலையின் மிக நெருக்கடியான இந்த காலகட்டத்தில், பாதுகாப்பு ரீதியாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களில் பிரதமருக்கு ஆலோசனை கூறும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மருத்துவ அவசர நிலை விவகாரத்தில் களமிறங்கியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியா தற்போது கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் தத்தளித்து வருகிறது. இந்தியா முழுவதும் பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது.
மோடி 2014’இல் இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு ,அவரின் சர்வதேச கொள்கையான “வாசுதைவ குடும்பகம்” எனும் உலகம் ஒரே குடும்பம் எனும் பார்வையில் மேற்கொண்ட பல முன்னெடுப்புகள் மற்றும் கொரோனா முதலாவது அலையின் போது, உதவி தேவைப்பட்ட பல நாடுகளுக்கு தானாக சென்று உதவியது போன்ற காரணங்களால், தற்போது இந்தியா உதவி கேட்கவில்லையென்றாலும், பல உலக நாடுகள் தங்களால் முடிந்த உதவிகளை இந்திய அரசுடன் பேசி அனுப்பி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் புதிதாக அதிபராக பதவியேற்ற ஜோ பிடென் அரசு, இந்தியாவுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்ய ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கோவிஷீல்டு தயாரிப்பிற்கு தேவையான மூலப்பொருட்கள் சப்ளையில் தடை அமெரிக்க அரசு தடை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் தற்போது இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடும் பெரும் அளவில் உள்ளது. இந்நிலையில், கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் சிஇஓ ஆதார் பூனவல்லா தடுப்பூசிக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்கி உதவுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பிடெனுக்கு நேரடியாகவே கோரிக்கை வைத்தார். எனினும் அமெரிக்கத் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவற்றில் சுயமாகவே இந்தியாவால் சமாளிக்க முடியும் என்றாலும், அவசர சூழ்நிலையில், மனிதாபிமான அடைப்படையில் உதவும் நாடுகளின் உதவியை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
மிக முக்கிய பிரச்சினையான தடுப்பூசி மூலப்பொருட்களை அமெரிக்காவைத் தவிர தற்போது வேறு வழி எதுவும் இல்லை என்பதால் இந்த விவகாரம் பிரதமர் மோடியின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்துத் தான், இந்த விவகாரத்தில், இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை பிரதமர் நேரடியாக களமிறக்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விசயத்தின் தீவிரத்தை உணர்ந்த அஜித் தோவல், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனிடம் உரிய முறையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்திய அரசு தரப்பில் இது குறித்து மௌனம் காத்து வந்தாலும், அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின் மூலம் இந்த விஷயம் வெளியே தெரிய வந்தது.
மூலப்பொருட்களை அனுப்பாவிட்டால் என்ன நடக்கும் என்பதை அஜித் தோவல் தனக்கே உரிய பாணியில் மிரட்டியதாகக் கூறப்படும் நிலையில், மற்றொரு பக்கம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மூலம் ஜோ பிடென் நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதற்கிடையே விஷயத்தின் தீவிரத்தை அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் நேரடியாக ஜோ பிடென் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்தே, ஜோ பிடென் இந்திய பிரதமர் மோடிக்கு போன் போட்டு, இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றும், போர்க்கால அடிப்படையில் தேவைப்படும் உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து, இந்தியாவுக்கு தேவைப்படும் பொருட்களை அனுப்பி வைக்கும் பணியை அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தானே நேரடியாக கண்காணித்து வருகிறார். இந்நிலையில், கலிபோர்னியாவிலிருந்து நாட்டிற்கான முக்கிய உயிர்காக்கும் மருத்துவப் பொருட்களின் முதல் சரக்கு நேற்று இரவு அனுப்பப்பட்டது.
“இந்திய மக்களுக்கு உதவுவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. கொரோனாவுக்கு எதிரான எங்கள் பகிரப்பட்ட போரில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்போம்” என்று சல்லிவன் நேற்று ஒரு ட்வீட்டில் வெள்ளை மாளிகை பொருட்களை வழங்குவதாக அறிவித்தவுடன் கூறினார்.
இதற்கிடையே, இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தனது அனைத்து வளங்களையும் பயன்படுத்த ஜோ பிடென் நிர்வாகத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..ஒரே ஒரு போன் கால் மூலம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அமெரிக்காவை பணிய வைத்துள்ளது பாதுகாப்பு வல்லுநர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.