புகையிலைப் பயன்பாட்டைத் தடுப்பதற்கும், புகைப்பிடிப்பவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உளவியல் தலையீட்டு நுட்பங்களை வழங்கும் பயிற்சி வேலைத்திட்டங்களின் தொடரை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு ஆரம்பித்துள்ளது.
தொற்றாத நோய்கள் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ஸ்ரீனி அலஹப்பெருமா தெரிவிக்கையில், இந்த வேலைத்திட்டம் “சுருக்கமான தலையீடு” (Brief Intervention) எனப்படும் உளவியல் அணுகுமுறையை மையமாகக் கொண்டதாகும். இதன் மூலம் சுகாதாரப் பணியாளர்கள் குறுகிய ஆலோசனை அமர்வுகள் வழியாக புகையிலைப் பயன்படுத்துவோரின் நடத்தை மாற்றத்தை ஊக்குவிக்க முடியும் என்றார்.
சில நிமிடங்களுக்குள் புகையிலைப் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதனை குறைக்கவோ அல்லது முற்றிலுமாக கைவிடவோ மக்களை ஊக்குவிப்பதே இந்த முறையின் நோக்கமாகும் என அவர் விளக்கினார்.
இந்தத் திட்டத்தின் கீழான முதல் பயிற்சி பட்டறை எதிர்வரும் ஜூன் 15ஆம் தேதி கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆலோசகர் மனநல மருத்துவர் டாக்டர் பிரபாத் விக்ரம பிரதான வளவாளராக கலந்துகொள்ளவுள்ளார்.
இந்தப் பயிற்சி நிகழ்ச்சியில் சுகாதார மருத்துவ அதிகாரிகள் (MOH), சுகாதாரக் கல்வி அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) மற்றும் பொது சுகாதார தாதியர்கள் (PHM) உள்ளிட்ட கள சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.




