தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை ” நீங்கள் ஒரு ஏமாற்று அரசியல்வாதி” என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன், முத்திற்கு நேராகவே சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று (20) இந்த சம்பவம் நடந்தது.
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு கடந்த 17 ஆம் திகதி நுவரெலியாவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோவும், சாணக்கியனும் பங்கேற்பார்கள் என ம.ம.மு. அறிவித்திருந்தது.
எனினும், இருவருமே நிகழ்வில் பங்கேற்கவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தினால் இருவரும் கலந்து கொள்ளவில்லையென மேடையில் இராதாகிருஷ்ணன் அறிவித்தார். நிகழ்வில் கலந்து கொள்வதாக கடைசி வரை கூறிவிட்டு, காலைவாரியதாக ம.ம.மு வட்டாரங்களில் கடுமையான அதிருப்தி இருந்தது.
எனினும், அவர்கள் கலந்து கொள்ளாததற்கு, போட்டி கட்சிகளின் அரசியல் அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, சாணக்கியன் மிகச்சிறு வயதிலிருந்தே கண்டியில் வளர்ந்தவர். அவரது “எதிர்காலமும்“ மலையக பிரதேசத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படுகிறது
அந்த தரப்புக்களிற்கு ஊடான அழுத்தத்தினால் அவர் நிகழ்வை தவிர்த்திருக்கலாமென கருதப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று நேற்று, நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது. இதன்போது சபை வளாகத்தில் இராதாகிருஷ்ணனை சந்திப்பதற்கு சாணக்கியன் சென்றுள்ளார். இதன்போது, கடுமையான கோபத்தை வெளிப்படுத்திய இராதாகிருஷ்ணன், சாணக்கியனுடன் கதைப்பதை தவிர்த்து, “ஏமாற்று அரசியல் வாதிகளுடன் நான் கதைப்பதில்லை“ எனக்கூறி கோபத்துடன் அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.
அவரை சமரசம் செய்ய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் முயன்றபோதும், அது பலனளிக்கவில்லை..