பங்களாதேஷ் அணியுடனான இரண்டு போட்டி டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால மேலாளராக மனுஜ காரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் தொடருக்காக இந்த நியமனத்தை, இலங்கை கிரிக்கெட் மேலாண்மைக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா உறுதிப்படுத்தினார்.
தற்போதைய மகளிர் கிரிக்கெட் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டு ஆலோசகராக இருக்கும் காரியப்பெரும, பங்களாதேஷ் தொடருக்கு மட்டுமே இலங்கை அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வட்டாரங்களின்படி, பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் பின்னர் நீண்ட கால அடிப்படையில் நிரந்தர இலங்கை அணி மேலாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
இலங்கை கிரிக்கெட் கடந்த மாதம் தேசிய அணி மேலாளர் பதவிக்கு விண்ணப்பங்களை கோரியது. இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ஃபர்வீஸ் மஹாரூப் இந்த பதவிக்கு விண்ணப்பித்ததாக பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.