வடமாகாணத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த 15 பேரும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகிறார்கள்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் இன்று 761 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் 16 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவர், பருத்தித்துறை வைத்தியசாலை நோயாளர் விடுதியில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் நாவாந்துறையைச் சேர்ந்தவர். இதுவரை யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் 4 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் பாற்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மூவர் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
மற்றொருவர் யாழ் நகரில் வங்கி ஒன்றில் பணியாற்றும் கொக்குவிலில் வசிப்பவர்.
வவுனியா பொது வைத்தியசாலை விடுதி ஒன்றில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 71 வயதுடைய முதியவர் நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வசிப்பவர்.