வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சின்ன சேலம் தொகுதியில் கடந்த 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஆர்.பி பரமசிவமும், திமுக சார்பில் ஆர் .மூக்கப்பனும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் ஆர்.பி.பரமசிவம் 39,042 வாக்குகள் கூடுதல் பெற்று திமுக வேட்பாளர் மூக்கப்பனை வென்றார்.
இவர் தன் பதவிக்காலத்தில் ரூ.28.76லட்சம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1998ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் தானாக முன் வந்து முன்னாள் எம் எல் ஏ பரமசிவம், அவர் மனைவி பூங்கொடி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு எம்.பி, எம் எல் ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
வழக்கு நடைபெற்றுவரும்போதே பூங்கொடி 2017ம் ஆண்டு இறந்துவிட்டார்.
இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் முன்னாள் எம் எல் ஏ பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், 33,04,168 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தும், 17.6.1991 முதல் 13.5.1996 காலகட்டத்தில் பரமசிவம், அவர் மனைவி, மகன்கள் மயில்வாகனன், பாபு மற்றும் கோவிந்தன் ஆகியோர் பெயரில் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும் அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.