மொனராகலை – பதுளை பிரதான வீதியில் பசறை 13 ஆவது மையில் கல்லுக்கு அருகாமையில் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசேட விசாரணையை ஆம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.டியிள்யூ.ஆர்.பிரேமசிறி இது தொடர்பாக தெரிவிக்கையில், இதற்கென குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
விபத்துக்கான உண்மையான காரணங்கள் மற்றும் இவ்வாறான விபத்துக்களை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பது இந்தக் குழுவின் பொறுப்பாகுமென்றும் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வீதி பாதுகாப்பிற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததா என்பது குறித்து இந்த குழு கண்டறியும் என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை விபத்தின் போது வீதியில் விழுந்திருந்த கல்லின் ஒருபகுதியை துரிதமான அகற்றுவதற்கு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
அந்த பாறை பகுதியை அகற்றுவதால் மேலேயுள்ள பாறை பகுதி இடிந்து விழக்கூடும் என்றும், அதில் ஏற்கனவே சில விரிசல்கள் இருப்பதால் பாறை பகுதியை அகற்றும் பணி மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்றும் செயலாளர் கூறினார்.
இதற்கிடையில், பேருந்து விபத்து நடந்த இடத்தில் வீதியில் விழுந்த பெரிய பாறையை அகற்றுமாறு இரண்டு ஒப்பந்தக்காரர்களுக்கும் பல சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தப்பட்ட போதிலும், அவர்கள் அதை அகற்றவில்லை என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் சந்தன அத்துலுவகே தெரிவித்தார்.
2020 நவம்பர் 22 ஆம் திகதி பாறை அந்த இடத்தில் விழுந்தது.
2020 டிசம்பரில், அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்ட இரண்டு ஒப்பந்தக்காரர்களுக்கும், பாறை விழுந்ததால் வீதி தடை ஏற்பட்டதால் அந்த இடத்திலிருந்து கல்லை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தலைவர் தெரிவித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெப்ரவரி 10 ஆம் திகதி வரை மூன்று முறை பாறையை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
நேற்று, அந்த பகுதியில் வீதியோரங்களில் இரும்பு வேலி, வேகத்தடை, கார்பெட் இடும்பணி நடந்தது.
இருப்பினும், விபத்து நடந்த இடத்தில் விழுந்துள்ள பாறை இன்னும் அகற்றப்படவில்லை. விபத்து நடந்த லுணுகலை- பசறை வீதியில் இதுபோன்ற பல ஆபத்தான இடங்கள் உள்ளன என்று சாரதிகள் கூறுகின்றனர்.
இதேவேளை, உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது.
லுணுகலையை சேர்ந்த பி. முரளிதரன் (46), லுணுகலை கே.எம்.டி.பத்மகுமார (35), லுணுகலை ஹொப்டன் ஆர்.எம்.எச். சந்தமாலி (24), ஹொப்டன் எஸ். யோகடன் (48), பசறை மீதும்பிட்டி ஆர். நாகரத்னம் (68), மீதும்பிட்டி, ஆ.பி.ஜெதுன் (86), லுணுகலை சோளவத்தை சுப்ரமணியம் (73), கதுருவெல பி. சுனில் அரியரத்ன (40), லுணுகலை அடாவத்தை அந்தோனிஸ் நோவா (32), மனைவி பெனடிக் நோகா (31), லுணுகலை ஆடம் சைபு அலிமா உம்மா (45), லுணுகலை சோளவத்தை சுப்பிரமணியம் ராஜேந்திரன் (55), லுணுகலை எம். சாவின்யா சத்சரணி (25) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.