கூட்டமைப்பின் அனுமதியுடனேயே போதைப்பொருள் கடத்தல்; பகிரங்கமாக 10 பிரம்படி தண்டனையை அமுல்படுத்துங்கள்: உலாமா தலைவர் உதறல் யோசனை!

Date:

தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் அனுமதி இல்லாமல் போதைப்பொருட்கள் எந்த வழிகளிலும் போக முடியாது. முஸ்லிம் பகுதிகளில் பள்ளிவாசல்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்து அவ்வாறு போதைபொருளை பாவிப்பவர்களை பகிரங்கமாக கொண்டு வந்து பத்து பிரம்படியாவது கொடுப்பதற்கு அரசாங்கம் அனுமதித்தால் மிக நன்றாக இருக்கும் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பில் அம்பாறை மாவட்டத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் முகமாக அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் நாட்டுக்குள்ளே நீண்டகாலமாக இருப்பதை நாங்கள் காணுகின்றோம். அதுவும் கடந்த ஆட்சியிலே மிகவும் மலிவாக எல்லா இடங்களிலும் காணப்பட்டது. இந்த ஆட்சியிலே ஒரு போதைப்பொருளை கடத்துவர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளார்கள். குறிப்பாக மேல்மாகாணம் போன்ற இடங்களில் போதை பொருள் விற்பவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். சிலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆகவே அம்பாரை மாவட்டத்தில் எங்களைப் பொறுத்த வரையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு இல்லாமல் போதைப் பொருட்களை கொண்டு போக முடியாது. ஆட்சியதிகாரம் அம்பாறை மாவட்டத்தில் யாரிடம் இருக்கின்றது என்பதை பாருங்கள். தமிழ் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் முஸ்லீம் பகுதிகளில் முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகளிடமும் தான் இருக்கின்றது. ஆகவே தமிழ் முஸ்லிம் கட்சிகளின் அனுமதி இல்லாமல் போதைப்பொருட்கள் எந்த வழிகளிலும் போக முடியாது என்பதை தான் நாங்கள் கூறுகின்றோம்.

அரசாங்கமானது தனது கடமையை மிகச்சரியாக செய்து கொண்டிருக்கின்றது. அரசாங்கம் இராணுவத்தை நிறுத்தி உள்ளது. போலீசாரை நிறுத்தியுள்ளது. அவர்கள் போதை விற்பனையாளர்கள் இருக்கட்டும் போதைபொருளை பாவிப்பவர்களாக இருக்கட்டும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை நாம் காணுகின்றோம். இவ்விடயத்தில் பள்ளிவாசல்களும் தலையிட வேண்டும்.

பள்ளிவாசல்கள் உடனடியாக தலையிட்டு யார் யார் போதைபொருட்களை பாவிக்கின்றார்கள் என்பதையும் அவர்களை உடனடியாக அரசாங்கம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்விடயங்களுக்கு முஸ்லிம் பகுதிகளில் பள்ளிவாசல்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்து அவ்வாறு போதைபொருளை பாவிப்பவர்களை பகிரங்கமாக கொண்டு வந்து ஒரு பத்து பிரம்படியாவது கொடுப்பதற்கு அரசாங்கம் அனுமதித்தால் மிக நன்றாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இவ்வாறு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதியில் போதைப்பொருள் பாவிப்பதை நாங்கள் அறிந்து கொண்டால் அதில் பள்ளிவாசல்கள் கட்டாயம் தலையிட்டு யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளின் ஜீப் வண்டியில் கூட போதைப்பொருள் கடத்தப்படுவதாக சில கதைகள் வந்து கொண்டு இருப்பதை நாம் அறிந்துள்ளோம். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது. இதில் பள்ளிவாசல் நிறுவனங்கள் தலையிட்டு எவ்வாறு இந்த போதை வஸ்துவை சமூகத்தில் இருந்து ஒழிக்க முடியும் என்பதை செயற்படுத்த முன்வர வேண்டும்.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் கூட இந்த போதைவஸ்து பாவனை பரவிக் கொண்டிருக்கின்றது என்ற செய்திகளை நாங்கள் கேள்விப்பட்டு இருக்கின்றோம். அவ்வாறான சூழ்நிலையில் பள்ளிவாசல்கள் தொண்டர் படைகளை நிறுத்தி இவ்வாறு பள்ளிவாசல் சம்பந்தப்பட்டவர்கள் பாடசாலை மாணவர்களுக்கு இப்போதைப்பொருட்களை விநியோகிக்கின்றார்களா என்பதை அறிந்து அவர்களை அரசாங்கத்தின் கைகளில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்