பசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் பலியாகியிருந்தனர். பசறை பகுதியே சோகமயமாகியுள்ளதுடன், வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றன. பெருந்திரளான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
பேருந்து விபத்தில் லுனுகலை அடாவத்தை பகுதியைச் சேர்ந்த பெனடிக் மெடோனா (31), அந்தோனி நோவா (32) ஆகியோரும் உயிரிழந்தனர்.
இந்த தம்பதியினர் வழக்கமாக பேருந்தில் ஏறுமிடத்திற்கு வர தாமதமாகியதால், பேருந்தை தவறவிட்டுள்ளனர்.
ஆனால் உரிய நேரத்தில் பதுளை வைத்தியசாலைக்கு செல்லவேண்டும் என்பதற்காக ஆட்டோவில் வந்த, பேருந்தை துரத்திபிடித்து ஏறியுள்ளனர்.
அந்தோனி நோவா என்பவர் பிறந்த நாளிலேயே உயிரிழந்தும் உள்ளார்.




