நான் கொழும்பிற்கு போகும்போது ஒவ்வொரு முறையும் சிங்கள ஊடகங்களில் பேட்டி கொடுப்பேன். அதன்மூலம் எமது பிரச்சனையை அவர்களிற்கு சொல்லலாம். நான் சிங்களத்தில் பாராளுமன்றத்தில் பேசியபோது, சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களே வந்து என்னுடன் பேசியுள்ளனர் என தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பட்டிருப்பு அமைப்பாளரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சாணக்கிய ராகுல வீரபுத்திரன்.
யாழில் இன்று எம்.ஏ.சுமந்திரன் அணி ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் தமிழ் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்யும் சில கட்சிகள் ஒரு நாடு இரு தேசம், தமிழர் தேசத்தை அங்கீகரிப்பது போன்ற வசனங்களை சொல்லி நான் கேட்டிருக்கிறேன் ஆனால் இதுவரை அதை எப்படி அடையப் போகிறார்கள் என்பதை ஒரு இடத்திலும் நான் கேட்கவில்லை.
சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க மாட்டோம், பிரதமரை சந்திக்க மாட்டோம் என்றார்கள். பின்னர் பிரதமருக்கு அண்மையில் கைகட்டிக் கொண்டு நின்ற படங்கள் வந்தது. நானும், சுமந்திரனும் சென்று பிரதமருக்கு பக்கத்திலிருந்து கதைத்து விட்டு வந்தோம்.
இராணுவ வைத்தியசாலையில் ஊசி போடகூடாதென்றவர்கள், பாராளுமன்றத்தில் சாப்பிடுவார்கள்.
புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையினருடன் நான் சூம் வழியாக தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். அவர்களில் 90 வீதமானவர்கள், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்றால் தனிநாடு என்றுதான் சிந்திக்கிறார்கள்.
2015ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைமையை தமிழ் மக்கள் மறந்து விட்டதால்தான், கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 10 ஆசனம் கிடைத்தது. இன்று ஒரு தேர்தல் நடந்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 20 ஆசனம் கிடைக்கும்.