29.8 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

மியான்மர் இராணுவ அரசுடன் உறவு வேண்டாம்: மன்னாரில் போராட்டம்!

மியன்மார் இராணுவ ஆட்சியோடு உறவாட வேண்டாம் என இலங்கை அரசை வலியுறுத்தி வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் குழும தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் போராட்டம் இடம் பெற்றது.

இந்த அமைதி போராட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகள், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள், மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தின் போது மியன்மார் இராணுவ ஜுன்டா ஆட்சியுடன் கொண்டுள்ள அனைத்து விதமான உறவுகளையும் பரிமாற்றங்களையும் இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

மியன்மார் இராணுவ ஜுன்டா ஆட்சியோடு உறவாட வேண்டாம் என கோரிக்கை முன் வைத்து அரசிற்கு ஊடக அறிக்கை ஒன்று ஏற்பாட்டுக் குழுவினால் ஊடங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுளள்து.

அந்த அறிக்கையில்,

மனித உரிமைகளை மீறுவதில் மிகவும் அபகீர்த்திக்குள்ளான அரசுகளில் ஒன்றாக ஆசியாவிலும் உலக அளவிலும் மியன்மார் அரசு உருவாகியுள்ளது.

2021 மாசி மாதம் 1ஆம் திகதி, மூத்த இராணுவ ஜெனரல் மின் ஆங் லாயிங் மற்றும் அவரின் இராணுவம் மியன்மாரில் ஜனநாயகமாக தெரிவுசெய்யப்பட்ட தேசிய ஜனநாயக லீக் தலைமையிலான அரசை இராணுவ சதியின் மூலம் கைப்பற்றியதோடு, மக்களின் தலைவர்களான திருமதி. ஆங் சாங் சூகி, நாட்டின் ஜனாதிபதி திரு வின் மையின்ட் அடங்கலான பல தலைவர்களையும் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனர்.

நாட்டின் தலைநகரான யங்கூன் மின்சார வெட்டால் இருளில் மூழ்கடிக்கப்பட்டதோடு நாடுமுழுதும் வலைத் தொடர்புகள் முடக்கப்பட்டன.

மக்கள் வீதிகளில் இறங்கி தமது தலைவர்களை விடுவிக்குமாறு கோரி போராட்டம் செய்ததோடு தமது ஜனநாயக உரிமைகளுக்காக குரல்கொடுத்தனர்.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை சார்ந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள மியன்மார் இராணுவம் அமைதியாக போராடியவர்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதலை மேற்கொண்டது.

இது வரையில் 120 இற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டிருப்பதுடன் பலர் காயப்பட்டுள்ளனர்.

இளம் பெண்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் காயப்பட்டும் உள்ளனர். படுகொலைக்குள்ளானோரில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்கும் குறைந்தவர்களாகும்.

2000இற்கும் மேற்பட்டோர் ஏதேச்சாதிகாரமாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண்களும் அடங்குவர். காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தமது குடும்பத்துடன் தொடர்பு கொள்ளவோ சட்டத்தரணிகளை அணுகவோ அனுமதிக்கப்படவில்லை.

கைது செய்யப்பட்ட தமது பிள்ளைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என பல குடும்பத்தினருக்கு தெரியாது.

போராட்டக்காரர்களுக்கும் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் எதிராக இராணுவம் சித்திரவதைகளையும் அட்டூழியங்களையும் மேற்கொண்டு வருகிறது.

ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்றரர்ஸ், மியன்மாரில் நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்துள்ளதோடு சிவில் ஆட்சிமுறைமைக்கு திரும்புமாறு கோரியுள்ளார்.

மியன்மாருக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் தோமஸ் அன்ருஸ் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும் போது, மியன்மார் நாடானது ஒரு கொலைகார, சட்டபூர்வமற்ற ஆட்சியினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தடைகளைப் பிறப்பிக்குமாறும் கேட்டுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையானது தனது தலைமைத்துவ அறிக்கையில், மியன்மாரின் வீழ்ச்சியுறும் நிலவரம் குறித்து ஆழ்ந்த கரிசணைகளை வெளிப்படுத்தி இருப்பதோடு, அமைதியான போராட்டக்காரர்கள் மீதான வன்முறைகளை கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் ஜனநாயகத்துக்கு திரும்புமாறு கோரியுள்ளது.

அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நால்வர் அணி நாடுகள், தாம் மியன்மாரில் ஜனநாயகத்தை மீள ஸ்தாபிக்க கூட்டாக செயற்படுவதாக பிரகடணப்படுத்தியுள்ளதாக வெள்ளைமாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மியன்மார் இராணுவ சதிக்குப் பொறுப்பான பத்துப் பேருக்கு எதிராக அமெரிக்கா தடைகளைப் பிறப்பித்துள்ளது.

இதில் இராணுவத்துக்கு நெருக்கமான மூன்று கம்பனிகளும் அடங்கும். ஐக்கிய இராச்சியம் மூன்று ஜெனரல்களுக்கு எதிராக தடைகளைப் பிறப்பித்துள்ளது.

மியன்மாரில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதை தான் கவனத்திறிகெடுத்துள்ளதாகவும், அந்த நாட்டுக்கான இராணுவ – தொழில்நுட்ப உதவிகளை நிறுத்துவதற்கு யோசிப்பதாகவும் ரஷ;யா தெரிவித்துள்ளது.

மியன்மார் இராணுவ சதியைக் கண்டித்து தென்கொரியா பாராளுமன்றம் தீர்மானமொன்றை நிறைவேற்றியிருப்பதோடு ஜனநாயகத்துக்குத் திரும்புமாறும் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையும் உலகின் ஜனநாயக நாடுகளும் மியன்மார் இராணுவ ஜுன்டா தலைமையின் அட்டூழியங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதுடன் சிவில் ஆட்சிக்கு திரும்புமாறு கோரிவருகின்றன.

இலங்கையின் சிவில் அமைப்பினரும் பொதுமக்களுமான நாம் ஐ.நா.வுடனும் உலகின் ஜனநாயக நாடுகளுடனும் கூட்டிணைந்து மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும், மியன்மாரின் கொலைகார, சட்டபூர்வமற்ற இராணுவ ஆட்சியுடன் உறவாட வேண்டாம் என்றும் இலங்கை அரசுக்கு வலியுறுத்துகிறோம்.

மியன்மாரில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐ.நா. பொதுச் சபையிலும், மனித உரிமைகள் பேரவையிலும் பரிந்துரை செய்யுமாறு நாம் இலங்கை அரசைக் கோருகிறோம்.

சார்க் நாடுகளையும் மக்களையும் மியன்மார் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்குமாறும் இராணுவ ஜுன்டா ஆட்சியுடன் உறவாட வேண்டாம் என்றும் நாம் வலிந்துரைக்கிறோம்

மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சியதிகாரத்திலிருந்து இறங்கி ஜனநாயகமாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்கவும், இன மற்றும் மதச் சிறுபான்மையினரின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தவும், மியன்மாரில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கவும் வேண்டுமென நாம் ஐ.நா.வையும் சர்வதேச சமூகத்தையும் கோருகிறோம்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஈஸ்டர் தாக்குதல்: முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கவே பிள்ளையான் புத்தகம் எழுதினார்… கருணா அம்மான் அதிர்ச்சி தகவல்!

Pagetamil

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

Leave a Comment