பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட முகவில் கிராம அலுவலர் பிரிவின் பீ பற்று பகுதியில் பதினாறு குடும்பங்களுக்கு சொந்தமான முப்பதாறு ஏக்கர் காணிகளை இராணுவம் பிடித்து வைத்திருக்கின்றது. இந்த காணிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று பி.ப 2.00 மணியளவில் பளை பிரதேச செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் தலைமையில் ஆரம்பமாகியது.
இங்கு கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறித்த தீர்மானத்தை சபையில் கொண்டுவரும் போது ஒருங்கிணைப்பு குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தா எதிர்ப்பு தெரிவித்து குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் பயனில்லை எனவும் இது தொடர்பாக பேசி முடிவெடுக்கலாம் எனவும் விடாப்பிடியாக நின்றார்.
ஆனாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன் மற்றும் கஜேந்திரன் பச்சிலைப்பள்ளி தவிசாளர் சு.சுரேன் ஆகியோர் குறித்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என குறியாக நின்றதால் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது