இலங்கை பெற்றுக்கொண்ட 1 பில்லியன் டொலர் கடனை இந்திய ரூபாயில் செலுத்த இந்தியா சம்மதித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம், பாரத ஸ்டேட் வங்கி (SBI) இலங்கை அரசாங்கத்துடன் கடன் வசதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தியாவில் இருந்து இலங்கை அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
எனினும், இலங்கையின் டொலர் கையிருப்பு மேலும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதால், இந்தியாவுடனான கடன்வசதி ஒப்பந்தத்தின்படி, பணத்தை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது. இது குறித்து இலங்கை, இந்தியாவுடன் தொடர் பேச்சுக்கள் நடத்தியதை தொடர்ந்து, இந்த புதிய அறிவிப்பு வௌியாகியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “இலங்கையிலிருந்து ஏற்றுமதி வருமானம் மற்றும் இலங்கை அரசாங்கத்துடனான பாரத ஸ்டேட் வங்கியின் கடன் வசதி ஒப்பந்தத்தைப் பெறுவதில் ஏற்றுமதியாளர்கள் அனுபவிக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான இத்தகைய வர்த்தக பரிவர்த்தனைகள் இந்திய ரூபாயில் தீர்க்கப்படலாம்.” ன தெரிவித்துள்ளது.
அதனுடன், ஒப்பந்தத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, இந்தியாவில் இருந்து தகுதியான பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதற்கான நிதியுதவி, இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ் ஏற்றுமதிக்குத் தகுதியுடையதா என்பதைப் பொறுத்து அனுமதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியது.




