நுகேகொட, மிரிஹான அம்புலதெனியவில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வாகனங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவமே காரணமென குற்றம்சாட்டி, அரசாங்கத்தை பதவிவிலக வலியுறுத்தி நேற்றிரவு அந்த பகுதியில் பெரும் மக்கள் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது. இராணுவத்தின் பஸ், ஜீப், பல முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
தற்போது, நுகேகொட – மஹரகம வீதியின் அம்புல்தெனிய சந்தி மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலை வாகனங்கள் மாத்திரமே உள்ளே செல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கலவரத்தில் காயமடைந்த 37 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 14 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மூன்று பொலிஸார், மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அடங்குவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.




