முதலிரவில் மனைவி வீட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தலைமறைவான மாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் அடூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
காயம்குளத்தைச் சேர்ந்த அசாருதீன் ரஷீத் (30) என்பவருக்கும், பழகுளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஜனவரி 30ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து புதுமணத் தம்பதிகள் முதல் இரவை மணமகள் வீட்டில் கழித்தனர்.
மறுநாள் அதிகாலை சுமார் 3 மணியளவில், அசாருதீன் தனது நண்பர் விபத்தில் சிக்கியதாக கூறி வீட்டை விட்டு வெளியேறினார்.
அவர் வெளியேறிய சிறிது நேரத்தில் தொலைபேசி நிறுத்தப்பட்டது.
இதனிடையே வீட்டில் இருந்த 30 சவரன் நகை மற்றும் ரூ.2.75 இலட்சம் பணம் காணாமல் போனதை மணமகளின் குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அடூர் போலீஸ் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தனர்.
அதன்பின் போலீசார் நம்பிக்கை மோசடி வழக்கு பதிவு செய்து, நடத்திய விசாரணையில்,
அசாருதீன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆலப்புழா சேப்பாட்டை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
அவரது முதல் மனைவி வீட்டிற்கு போலீசார் சென்றபோது, அசாருதீன் முதல் மனைவிக்கு எண்ணெய் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.




