இலங்கை- மேற்கிந்தியத்தீவுகள் அணிகளிற்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், இலங்கை தொடக்க வீரர் தனுஷ்க குணதிலகவின் ஆட்டமிழப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
களத்தடுப்பிற்கு இடையூறாக இருந்தமை தொடர்பான ஐசிசி விதி 37இன் கீழ் அவர் ஆட்டமிழந்தவராக, நடுவர் அறிவித்தார்.
நேற்றைய ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது. நீண்ட இடைவெளியின் பின்னர் தொடக்க வீரர்கள் சதக் கூட்டணி அமைத்தனர். தனுஷ்க குணதிலக அடித்தாட, திமுத் கருணாரத்ன நிதானமாக ஆடினர்.
இவர்களின் இணைப்பாட்டம் மேற்கிந்தியத்தீவுகளிற்கு தலைவலியாக அமைந்திருந்தது.
இந்த ஜோடியை பொலார்ட் 20வது ஓவரில் பிரித்தார். கருணாரட்ன, பொலார்ட்டிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
மீண்டும் அடுத்த ஓவரை வீச வந்த பொலார்ட், குணதிலகவிற்கு முதல் பந்தை வீசினார்.
பந்தை இலேசாக தட்டிய குணதிலக, ஒரு ஓட்டத்திற்காக சில அடிகள் எடுத்து வைத்தார். புதிய வீரராக மறுமுனையில் களமிறங்கியிருந்த பதும் நிஷங்கவம் நகர, பந்து அருகிலேயே இருப்பதை உணர்ந்த குணதிலக, வர வேண்டாமென நிஷங்கவிற்கு மட்டையால் சைகை காட்டியபடி பின்னால் சென்றார்.
குணதிலக தடுத்த பந்து அவரது காலடியிலேயே இருந்தது.
குணதிலக முன்னால் நகர்ந்ததையடுத்து, பொலார்ட் விரைவாக அவரை நோக்கி ஓடிவந்தார். குணதிலக பின்னால் நகர்ந்த போது, பந்து அவரது காலடியில் மிதிபட்டது.
களத்தடுப்பிற்கு இடையூறாக செயற்பட்டதாக பொலார்ட் முறையிட்டார். குணதிலக வேண்டுமென்றே ரன் அவுட்டை தடுத்ததாக முறையிட்டார்.
நடுவர், தொலைக்காட்சி நடுவர் நைகல் குகுயிட்டிடம் முடிவை விட்டார். சிறிது நேரம் ஆராய்ந்த பின்ன், ஐ.சி.சி விதி 37 இன் கீழ் குணதிலக ஆட்டமிழந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.
இந்த விவகாரத்தில் பொலார்ட்டிற்கு எதிரான முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மன்கார்ட் மற்றும் களத்தடுப்பிற்கு இடையூறு விளைவிக்கும் விதிமுறைகளின் கீழான ஆட்டமிழப்பு கோரிக்கைகள் கிரிக்கெட் ஸ்பிரிட்டை கொண்டதல்ல என்பது மரபாக இருக்கிறது. பொலார்ட் கிரிக்கெட் உணர்வை சிதைத்து விட்டார் என பல மூத்த வீரர்கள் கண்டித்துள்ளனர்.
குணதிலகவின் ஆட்டமிழப்புடன் சீட்டுக்கட்டை போல இலங்கை சரிந்து, போட்டியில் படுதோல்வியடைந்தது.
— Ishrath Imtiaz (@IshrathImtiaz) March 10, 2021



