பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 15 தமிழ் அரசியல் கைதிகளிற்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக ஒரு தொகை நிதி உதவி வழங்கும் நிகழ்வு இன்று (7) இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் ஜெட்விங் தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கலந்துகொண்டு உதவித்திட்ட நிதியினை வழங்கிவைத்தார்.
தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் வாமதேவா தியாகேந்திரனினால் 15 பேருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி அந்த நிதியை வழங்கி வைத்தார்.
இந்த நிதிப்பங்களிப்பிற்காக தியாகி நிதிய தலைவருக்கு இராணுவத்தளபதி நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், யாழ் மாவட்ட இராணுவ படைப்பிரிவுகளின் தளபதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




