ஏறாவூர் ஐயன்கேணி ரியாஸ் பேக்கரி வீதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெறுவதாக ஏறாவூர் பொலிஸாருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவ்விடத்துக்கு சென்ற பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், மோதல் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினார் என்ற அடிப்படையில் பெண் ஒருவரை தாக்கியமை என்பவற்றின் அடிப்படையில் ஏறாவூர் பொலிஸாரினால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த விவகாரம் தொடர்பில் தலைமறைவாகி உள்ள மேலும் இரண்டு பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி இரவு வேளையில் இரு குழுக்கள் கடுமையான மோதலில் ஈடுபடுவதாக பொலிஸ் நிலையத்திற்கு பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பினை அடுத்து , அவ்விடத்திற்கு பொலிஸ் குழுவினர் விரைந்த பொழுது குழப்பத்தில் ஈடுபட்ட சிலர் தமது வசம் வைத்திருந்த பொல்லுகள் , கம்பிகள் என்பவற்றை கைவிட்டு விட்டு வீடுகளுக்கு ஊடாக தப்பிச் சென்ற வேளையில் மேலும் சிலர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், அவ்விடத்தில் நின்ற பொதுமக்கள் மீதும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.
அத்துடன் பெண் ஒருவருக்கு பகிரங்க கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன் நள்ளிரவு வேளையில் அவரது வீடு புகுந்து தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணகளை முன்னெடுத்து வந்த ஏறாவூர் பொலிஸார் 3பேரை கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீர்த்தி ஜெயந்த தெரிவித்தார்.
அத்துடன் குற்றச் செயல்களை முன்னெடுத்தவர்கள் மக்களது கவனத்தை திசை திருப்பும் பொருட்டு சமூக வலைத்தளங்களில் எவ்வித தெளிவான விளக்கங்களும் அற்ற வகையில் அது தொடர்பான வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




