விரைவில் கூட்டாகவோ, தனித்தோ பிற தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஒற்றுமை விவகாரம் தொடர்பில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த தலைவர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.
தமிழ் கட்சிகளிற்கிடையிலான ஒற்றுமை முயற்சிக்காக அழைக்கப்பட்ட கலந்துரையாடலில் இன்று (4) இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஆகிய கட்சிகள் இன்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
யாழ் நகரிலுள்ள ரெலோ அமைப்பின் அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு ஆரம்பித்த கலந்துரையாடல், சுமார் 1.30 மணித்தியாலங்கள் நீடித்தது.
இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டில் பங்களித்த ரெலோவின் மூத்த பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தகவல் தருகையில்,
“இன்றைய சந்திப்பின் தொடக்கத்திலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் சில விடயங்களை அழுத்தமாக தெரிவித்தார். ஏற்கனவே 9 கட்சிகள் கூட்டம் நடந்தாலும், அதை தமிழ் அரசு கட்சியே குழப்பியது. இலங்கை தமிழ் அரசு கட்சி உண்மையில் கூட்டு ஒன்றை விரும்புகிறதா? அதில் பங்கெடுக்க விரும்புகிறதா? என்பதை தீர்மானிக்க வேண்டுமென்றார்.
தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமது கட்சி ஒற்றுமை முயற்சிக்கு முழுமையாக ஒத்துழைத்து, அந்த முயற்சியை முன்னெடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த ஒற்றுமை முயற்சிகளில் ஏற்பட்ட பின்னடைவுகள், தவறுகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக இந்த கூட்டு முயற்சியை முன்னெடுக்க தயாராக இருப்பதாக அனைத்து கட்சிகளும் இணங்கின. இதையடுத்து விரைவில் குழுவாகவோ, தனித்தோ ஏனைய கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி, நிலைப்பாடுகள் சார்ந்த கூட்டு ஒன்றை உருவாக்குவதென தீர்மானிக்கப்பட்டது.
இந்த சந்திப்பிற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் வருவதில்லையென்ற முடிவவை எடுத்திருந்தனர். எனினும், எமது தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்று தீவிர முயற்சி செய்து, சுரேஷ் பிரேமச்சந்திரனை பங்குபெற வைத்து விட்டார். இதேபோல, மற்றையவர்களையும் விரைவில் அழைத்து சந்திப்போம்“ என்றார்.




