மருதங்கேணியில் சுவீகரிப்பு முயற்சி: பயணத்தடைக்குள் பொதுமக்களிற்கு அறிவிக்காமல் இராணுவத்தை பயன்படுத்தி காணி அளவீடு!

Date:

யாழ் மாவட்டத்தின் மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்டலாய் பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கத்துடன், இராணுவத்தின் பொறியியல் பிரிவின் மூலம் காணி அளவீடு நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

பயணத்தடை நேரத்தில், பொதுமக்களிற்கு உரிய அறிவித்தல் எதுவும் வழங்காமல், நில அளவை திணைக்களம் என்ற சிவில் நிர்வாக நடைமுறையின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய காணி அளவீட்டை இராணுவத்தின் பொறியியல் பிரிவு மேற்கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளதாக காணி உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்

தகவலறிந்து காணி உரிமையாளர்கள் வெளியிடங்களிலிருந்து அங்கு சென்று, தற்போது குவிந்துள்ளனர்.

அங்கிருந்து தமிழ்பக்கத்துடன் பேசிய காணி உரிமையாளர்கள் சிலர், தமது காணிகளிற்குள் அளவீடு செய்யப்பட்டு, அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

மண்டலாய் பிள்ளையார் ஆலயத்தின் கிழக்கு திசையாக 300 மீற்றர் நீளமான தூரத்திற்குட்பட்ட காணிகள் இன்று அளவீடு செய்யப்பட்டுள்ளது.

மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்டலாய் பிள்ளையார் ஆலயத்தின் அருகாக 700 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் பிரமாண்ட திட்டம் இராணுவத்திடம் உள்ளது. தற்போது அண்ணளவாக 300 ஏக்கர் வரை சுவீகரிக்கப்பட்டு, பிரமாண்ட படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

பலாலி படைத்தளத்திலிருந்த கனரக ஆயுதங்கள் உள்ளிட்ட படைக்கட்டுமானங்கள் மண்டலாய் பகுதிக்கே நகர்த்தப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

அந்த முகாமை விட மேலும் பல நூறு ஏக்கர் காணிகளை சுவீகரிக்க இராணுவம் முயன்று வருகிறது. இதற்குள் பெருமளவு தனியார் காணிகளும் உள்ளடங்குகின்றன. அரச அதிகாரிகளும் காணி சுவீகரிப்பிற்கு உடந்தையாக இருப்பதால் தாம் பெரும் நெருக்கடியை சந்திப்பதாக காணி உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

பிரதேச செயலாளருக்கு அறிவித்தே தாம் அளவீட்டு பணியை நடத்தியதாக இராணுவத்தரப்பு தம்மிடம் தெரிவித்ததாக, அந்த பகுதிக்கு சென்ற காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தகவலறிய, மருதங்கேணி பிரதேச செயலாளரை தொடர்பு கொள்ள தமிழ்பக்கம் பலமுறை முயன்றது. எனினும், அவர் அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை.

இந்த காணி சுவீகரிப்பு முயற்சி பலமுறை நடைபெற்றது. எனினும், தமிழ் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தி அதனை தடுத்து நிறுத்தியிருந்தனர். அத்துடன், உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்திருந்தனர்.

வடமராட்சி கிழக்கின் வளம் கொழிக்கும் நிலங்களே தற்போது பயணத்தடை காலகட்டத்தில் இராணுவத்தால் அளவீடு செய்யப்பட்டு சுவீகரிக்க முயற்சிக்கப்படுகிறது. முன்னர் இந்த பகுதிகளில் திராட்சை உள்ளிட்ட பெருமளவு விவசாய உற்பத்திகள் நடைபெற்றன.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்