ஒடிசா மாநிலம் ரயஹடா மாவட்டம் குனுப்பூரில் கிளைச்சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மொத்தம் 113 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால், சந்தேகமடைந்த சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தனர். அதன்படி, சுகாதாரத்துறை அதிகாரிகள் கைதிகள் மற்றும் சிறைத்துறை ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர்.
அதில், 113 கைதிகளில் 70 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறைத்துறை ஊழியர்கள் 5 பேருக்கும் வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா உறுதி செய்யப்பட்ட 75 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எஞ்சிய சிறைக்கைதிகள் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்ட அனைவரும் தொடர்ந்து மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளனர்.




