வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றமையால் திருமண மண்டபம் சுகாதாரப் பிரிவினரால் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.
நேற்று மாலை (04) இந்த சம்பவம் நடந்தது.
வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள ஞான வைரவர் ஆலய வீதியில் அமைந்துள்ள வன்னி இன் திருமண மண்டபத்தில் மன்னாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும், வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு சுகாதார பிரிவினரின் அனுமதி கோரப்பட்டது. இதில் 15 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. எனினும், மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், வன்னி இன் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதில் சுமார் 50 பேர் வரையில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அங்கு சென்ற சுகாதாரப் பிரிவினர் அங்கு கூடியிருந்தவர்களை கடும் எச்சரிக்கை வழங்கி அங்கிருந்து வெளியேற்றியதுடன், திருமண வீட்டாருக்கும் கடும் எச்சரிக்கை வழங்கினர்.
சுகாதார அறிவுறத்தல்களை மீறி மண்டபத்தை வழங்கி மக்களை ஒன்று கூட்டியமை தொடர்பில் திருமண மண்டபம் சுகாதாரப பிரிவினரால் சீல் வைக்கப்பட்டு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.




