நயன்தாரா நடித்த ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தனக்கு தான் முதலில் வந்ததாக நவ்யா நாயர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் சந்திரமுகி படத்திலும் நடிக்க மறுத்திருக்கிறார்.
ஹரி இயக்கத்தில் சரத்குமார் அப்பா, மகனாக நடித்த ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நயன்தாரா. அடுத்ததாக அவர் ரஜினிகாந்த் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். யாருய்யா இந்த பொண்ணு, முதல் படத்தில் சுப்ரீம் ஸ்டார், இரண்டாவது படத்தில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடித்திருக்கிறார் என்று பலரும் வியந்தார்கள்.

அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நயன்தாரா. இந்நிலையில் ஐயா படத்தில் ஹீரோயினாக நடிக்குமாறு ஹரி முதலில் நயன்தாராவை கேட்கவில்லையாம். மாறாக கேரளாவை சேர்ந்த நவ்யா நாயரை தான் கேட்டாராம்.
இது குறித்து நவ்யா நாயர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

ஐயா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் அப்பொழுது மலையாள படங்களில் பிசியாக இருந்ததால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. மேலும் பி. வாசு இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் நடித்த சந்திரமுகி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் நான் ஏற்கவில்லை என்றார். navya nairநவ்யா நாயர் நிராகரித்த இரண்டு படங்களிலும் நயன்தாரா நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
ராதாமோகன் இயக்கத்தில் பிரசன்னா நடித்த அழகிய தீயே படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தார் நவ்யா நாயர். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாச கிளிகள், அமிர்தம், மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ஆடும் கூத்து, ரசிக்கும் சீமானே ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
அவர் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் சந்தோஷ் மேனன் என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்கிற மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு நவ்யா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் கன்னட ரீமேக்கான த்ரிஷாயாவில் நடித்திருந்தார் நவ்யா நாயர்.




