முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இன்று காலை 8.50 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் கணவனை இழந்த 39 வயது பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது காணியில் இருக்கின்ற பனை மரத்துக்கு அருகாமையில் குப்பைகளை கூட்டி புதைப்பதற்காக மண்வெட்டி கொண்டு கிடங்கு ஒன்றை வெட்ட முற்பட்டபோது அதிலிருந்த குண்டு வெடித்தது. அவர் சிறிய காயங்களுக்கு உள்ளான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த பகுதியில் வேறு வெடிபொருட்கள் இருக்கிறதா என்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர் ஆ பகுதி தேவிபுரத்தை சேர்ந்த கணவனை இழந்த 3 பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய கலையரசன் கேதா என்பவராவார்.




