பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கம்பளை விதானாலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதாவை அங்கிருந்து வெளியில் அழைத்து வர வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூசா சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று (17) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அவரை இந்த மாதம் 24 ஆம் திகதி வரை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வெலே சுதாவின் தாய் ஆர்.பி. மாலனி என்பவர் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளர் நீதிபதி அர்ஜூன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதேபோல் இவ்வாறு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பில் ஆட்சேபனைகளை தெரிவிக்க பிரதிவாதிகளுக்கு தகவல் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர், பூசா சிறைச்சாலையின் அத்தியட்சகர், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபருக்கு அறிவித்தல் கடிதத்தை அனுப்புமாறு மனுதாரர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வழக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.



