CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

Date:

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான நெருக்கடி நிலவுவதாக சுகாதார தொழில்முறை நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகள் அத்தியாவசிய சிகிச்சை தாமதத்தை எதிர்கொண்டு வருவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

கதிர்வீச்சு சிகிச்சைக்கான திட்டமிடலில் பயன்படுத்தப்பட்ட பழைய CT Simulation இயந்திரம் 2026 ஏப்ரல் 29ஆம் தேதி செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக புதிய CT Simulation இயந்திரம் மே 21ஆம் தேதி நிறுவப்பட்டிருந்தாலும், அது அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் கூரையில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக இதுவரை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

தொழில்நுட்பக் கோளாறுகள் ஜூன் 1ஆம் தேதிக்குள் சரிசெய்யப்பட்டிருந்தாலும், அந்த இயந்திரம் இன்னும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படவில்லை என சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கதிர்வீச்சு சிகிச்சைக்கு முன் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான செயல்முறையாக CT Simulation கருதப்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதி துல்லியமாக கண்டறியப்படுவதுடன், கதிர்வீச்சின் திசை, கோணம், அளவு ஆகியவை திட்டமிடப்பட்டு, ஆரோக்கியமான திசுக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன.

CT Simulation இன்றி கதிர்வீச்சு சிகிச்சையை தொடங்குவது நடைமுறையில் சாத்தியமற்றதாக இருப்பதால், சிகிச்சையின் முக்கிய கட்டமே தற்போது தாமதமாகியுள்ளது.

அவசரநிலைகளில் PET-CT இயந்திரம் பயன்படுத்தப்பட்டாலும், அது CT Simulation-க்கு மாற்றாக நீண்டகால தீர்வாக பொருத்தமற்றது எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே கீமோதெரபி, அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை நிறைவு செய்துள்ள பல நோயாளிகள் தற்போது காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். கதிர்வீச்சு சிகிச்சை தாமதமாவதால் புற்றுநோய் மீண்டும் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்வீச்சு சிகிச்சை வசதிகள் மகரகம, கொழும்பு, கண்டி, காலி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய சில மையங்களில் மட்டுமே இருப்பதால், ஒரு மையத்தில் ஏற்படும் தாமதம் நாடு முழுவதும் உள்ள நோயாளிகளை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கம் எச்சரித்துள்ளது.

சுகாதார தொழில்முறை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், CT Simulation இயந்திரத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், நிர்வாக தாமதங்களை விட நோயாளிகளின் உயிருக்கு முன்னுரிமை வழங்கி, புற்றுநோய் சிகிச்சைக்கான தேசிய அவசர செயல் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

“புற்றுநோய் நோயாளிகளுக்கு நேரம் என்பது ஒரு வளம் மட்டுமல்ல; அது அவர்களின் உயிரே ஆகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

சுரேஷ் சல்லே இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு...

2026 உலகின் நம்பர் 1 ஆரோக்கிய சுற்றுலா இலக்காக இலங்கை

2026-இல் உலகின் முன்னணி Wellness Destination ஆக இலங்கை முதலிடம்! ஆரோக்கியம் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்