100 நாட்களுக்கும் மேலாக நீடித்த அமெரிக்கா – ஈரான் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்றில் உடன்பாடு கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் கட்டார் நாடுகளின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம், எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்படவுள்ளது.
ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் நடைபெற்று வந்த இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருந்த கடற்படை முற்றுகையும் உடனடியாக நீக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் அனைத்து கப்பல் போக்குவரத்திற்கும் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்திய இந்தப் போர், ஈரானின் அணு திட்டம் தொடர்பான பதற்றத்தின் பின்னணியில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி வெடித்தது.
ஒப்பந்தத்தின் வரைவு விவரங்களின்படி, அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம், ஹோர்முஸ் நீரிணை மீள்திறப்பு, ஈரானைச் சுற்றியுள்ள அமெரிக்க இராணுவப் பிரசன்னத்தை குறைத்தல், எண்ணெய் ஏற்றுமதிக்கான தடைகளை தளர்த்தல் மற்றும் 24 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், அணு விவகாரம் தொடர்பான இறுதி ஒப்பந்தம் 60 நாட்களுக்குள் எட்டப்பட வேண்டும் என்றும், அமெரிக்கா தனது உறுதிமொழிகளை நிறைவேற்றிய பின்னரே இறுதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், கட்டார் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பை பாராட்டியதுடன், இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் புதிய அமைதிக் காலத்தை உருவாக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கட்டார் அரசும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்று, இது பிராந்திய மற்றும் உலக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான முன்னேற்றமாக அமையும் என தெரிவித்துள்ளது.
ஈரான் தூதரகம் தனது சமூக ஊடக பதிவில், ஹோர்முஸ் நீரிணையில் நாட்டுக் கொடி நாட்டப்பட்டுள்ள படத்துடன், “Welcome to a New Era in the Middle East.” என்ற செய்தியை வெளியிட்டுள்ளது.




