மட்டக்களப்பில் கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற ஒருவரிடம் போக்குவரத்து பொலிசார் 30 ஆயிரம் ரூபா கப்பம் வாங்கியதாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார் எனவே இதை வன்மையாக கண்டிப்பதுடன் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் இதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்
மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (8) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
பார் வீதி மட்டிக்கழி மீன் சந்தைக்கு அருகில் சம்பவ தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) பகல் 12.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் ஒன்றில் இருவர் பிரயாணித்த போது அதில் கையடக்க தொலைபேசியை காதில் வைத்து பேசிக்கொண்டு அதனை செலுத்தி சென்றுள்ளார்.
இதன் போது எதிரே வந்த போக்குவரத்து பொலிசார் இவர்களை மறித்த போது இவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திய நிலையில் மோட்டார் சைக்கிளை; பரிசோதிக்க வேண்டும் என பொலிசார் தெரிவித்ததையடுத்து அதை செலுத்தி வந்த மீனவரானவர் வெளிநாடு செல்ல இருப்பதால் அவர் பயத்தில் கையடக்க தொலைபேசியை பொலிசாரிடம் கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்தவரிடம் ஓடியவர் வீட்டை காட்டுமாறும் இது யாருடையது விசாரித்த நிலையில் அது அவருடைய தந்தையுடையது என்றதையடுத்து மோட்டார் சைக்கிளை கொடுத்து குற்றத்துக்கு 80 ஆயிரம் தப்பி ஒடிய குற்றத்திற்கு ஒரு இலட்சம் மொத்தமாக ஒரு இலச்சத்து 80 ஆயிரம் அபதாரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்து மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்துக்கு பொலிசார் கொண்டு சென்றுள்ளனர்.
அதன் பின்னர் பொலிசார் 60 ஆயிரம் ரூபா கப்பமாக தந்தால் மோட்டார் சைக்கிளை விடுவிப்பதாக தெரிவித்த நிலையில் குறித்த நபர் மீன் வியாபார வர்த்தகர் ஒருவர் ஊடாக குறித்த போக்குவரத்து பொலிசாரை நாடிய தையடுத்து 30 ஆயிரம் ரூபாவுக்கு வந்ததையடுத்து குறித்த நபரிடம் பணம் இல்லாத காரணத்தால் தனது மனைவியின் தோட்டை வாங்கி எடுத்து ஈடுவைத்து 30 ஆயிரம் ரூபா பணத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று அந்த பணத்தை கப்பமாக வழங்கிய பின்னர் மோட்டார் சைக்கிளை மீட்டுக் கொண்டு வந்துள்ள பாதிக்கப்பட்டவர்; எங்களிடம் முறைப்பாடு தெரிவித்து ள்ளனர்.
எனவே மாவட்டத்தில் போக்குவரத்து பொலிசார் இவ்வாறு கப்பம் கோரும் நடவடிக்கையை கண்டிக்கின்றோம் அதேவேளை இந்த கப்பம் வாங்கும் நடவடிக்கை முற்று முழுதாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் இதனை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.
-கனகராஜா சரவணன்-




