அமெரிக்கத் தரைப்படைகளை ஈரானுக்குள் நிலைநிறுத்துவது குறித்த விரிவான திட்டங்களை மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளதாகவும், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் சிபிஎஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்குத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஆலோசனைகள் குறித்து அறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அப்பகுதிக்குத் தரைப்படைகளை அனுப்புவதா வேண்டாமா என டிரம்ப் பரிசீலித்து வருவதாக சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. “நான் எங்கும் படைகளை அனுப்பப் போவதில்லை” என்று அதிபர் பகிரங்கமாகக் கூறியிருந்தாலும், அத்தகைய முடிவை ஊடகங்களுக்கு வெளியிடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
படைகளை நிலைநிறுத்தும் பட்சத்தில், ஈரானிய வீரர்கள் அல்லது உளவாளிகளைத் தடுத்து வைப்பதை எவ்வாறு கையாள்வது என்பது உட்பட, அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் விவாதித்து வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
எண்ணெய் மையமான கார்க் தீவை ஆக்கிரமிக்க அல்லது முற்றுகையிட டிரம்ப் திட்டமிட்டு வருவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, தாங்கள் விரும்பும் போதெல்லாம் அத்தீவை “முற்றிலுமாக அழிக்க” முடியும் என்று வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை கூறியது.
மேலும், ஆயிரக்கணக்கான கூடுதல் மரைன் வீரர்களையும் மாலுமிகளையும் மத்திய கிழக்குக்கு அமெரிக்க இராணுவம் அனுப்பி வருவதாக மூன்று அமெரிக்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.



