கறுப்பு ஜூலை இனப்படுகொலை நிகழ்வினை மறைக்க முயலும் அரசின் செயற்பாடுகளிற்கு வன்மையான கண்டனத்தினை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்-
பௌத்த சிங்கள பேரினவாத அரசினால் இனவெறி பிடித்த காடையர்களை ஏவி தமிழர்களை திட்டமிட்டு இனவழிப்பு செய்த மிக முக்கியமான கறுப்பு வரலாற்றின் பக்கங்களான ஜூலை கலவரத்தில் தமிழர்களின் உயிர்கள் கொடூரமான முறையில் பறிக்கப்பட்டு அவர்களது வீடுகள் வணிகநிலையங்கள் வாகனங்கள் எரிக்கப்பட்டு வடக்கிற்கு தமிழர்களை விரட்டி அடித்து அதுவே உங்கள் தேசம் என அரசே செய்த மாபெரும் இனப்படுகொலை நிகழ்வினை மறைக்க முயலும் அரசின் செயற்பாடுகளிற்கு வன்மையான கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஜூலை 23ம் திகதி கறுப்பு ஜூலை எனவும் இனவழிப்பு நாளாகவும் தொடர்ச்சியாக நினைவுகூரப்படுகின்றது ஆனால் 2022இல் இருந்து இதற்கு வேறு பெயர்களை வழங்க JVP/NPPயினர் முனைகின்றார்கள். அரச ஆதரவுச் சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுத் துயரத்தை அதே பெயரில் நினைவுகொள்ளக் கூட திராணியற்றவர்களாக இருக்கின்றார்கள்.
அத்துடன் இவ் ஜூலை கலவரமான தமிழின இனப்படுகொலை தொடர்பிலும் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் .
அதன் மூலம் அதற்கான பிரதான பின்னணியாக செயற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் சிங்கள இனவாத கடையர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதுடன் உரிய நியாயம் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு இதற்காக அனைதவரும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்- என குறிப்பிடப்பட்டுள்ளது.




