சமீபத்தில் இந்திய பிளாக்பஸ்டர் படமான லக்கி பாஸ்கர் படபாணி சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது. இளம்பெண்ணொருவரின் வட்ஸ்அப் வலையில் விழுந்த வங்கி ஊழியர் ஒருவர், பெருமளவு வங்கிப் பணத்தை மோசடி செய்து சிக்கியுள்ளார்.
கடுவெலயில் உள்ள ஒரு அரசு வங்கிக் கிளையில் பணிபுரியும் காசாளர் ஒருவர், வங்கியின் நிதியிலிருந்து ரூ.135 மில்லியனை பல்வேறு வெளிப்புறக் கணக்குகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக கடுவெல போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேக நபரை ஒரு இளம் பெண் வாட்ஸ்அப் மூலம் ஏமாற்றி, எந்தவொரு வைப்புத்தொகைக்கும் தினசரி 10% வட்டி விகிதம் வழங்கப்படுமென உறுதியளித்தார். அந்தப் பெண் கூறுவது உண்மைதானா என பரிசோதிக்க, காசாளர் ஆரம்பத்தில் அந்தப் பெண் வழங்கிய கணக்கிற்கு ரூ.30,000 ஐ மாற்றினார். இளம்பெண் சொன்னதை போலவே, சில மணி நேரங்களுக்குள் ரூ.33,000 வட்டியாக அவருக்கு கிடைத்தது.
வட்டிப்பணம் அனுப்பப்பட்டதைக் கண்டு நம்பிக்கையடைந்த காசாளர், மறுநாள் (29) பணிக்கு வந்ததும், அந்தப் பெண் பகிர்ந்து கொண்ட பல கணக்குகளுக்கு ரூ.135 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வங்கியிலிருந்து மாற்றத் தொடங்கினார். பரிவர்த்தனைகள் ஒரே நாளில் முடிக்கப்பட்டன. ரூ.3 மில்லியன் முதல் ரூ.20 மில்லியன் வரை தனியார் மற்றும் அரசு வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றங்கள் செய்யப்பட்டன.
நிதியைக் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அடையாளம் காண போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.



